அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணி: விண்ணப்பம் பெற போட்டா போட்டி
நெல்லை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பலர் முட்டி மோதுவதால் போட்டி கடுமையாக இருப்பதாக பலர் புலம்பி வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு எழுத்து தேர்வு முலம் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 10ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வழங்கப்படுகின்றன.
விண்ணப்ப கட்டணம் ரூ.50, தேர்வு கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அவற்றை வாங்கிய இடத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும். வேறு வழிகளில் அனுப்பக் கூடாது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் 5 முதல் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்டத்துக்கு 11 ஆயிரம் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதில் நேற்று மாலை வரை 8 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன. அது போல் அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வரும் ஜனவரி 10ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த தேர்வு நடைபெறும். இது தொடர்பான போட்டி புத்தகங்களை ஆசிரியர்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். இநத பதவிக்கு 2 லட்சம் பேர் முட்டி மோதுவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.