உங்க குழந்தைக்கு தடுப்பூசி போடலையா? - இதோ 7 மாவட்டங்களில் இறுதி முகாம்!
சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் தமிழக அரசின் இறுதிக் கட்ட தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது.
மத்திய அரசு சார்பில் "இந்திரதனுஷ்" தடுப்பூசி திட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களில் அமல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் 1.66 லட்சம் பேர் பயனடைந்தனர். அதேபோல தமிழக அரசின் சார்பில் மேலும் 7 மாவட்டங்களில் இந்தத் திட்டம் மே மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு விடுபட்ட தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது.
மேலும், காசநோய், மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி, தடுப்பு மருந்து வழங்கப்படும்.
தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சென்னை, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதுதவிர, கள்ளக்குறிச்சி, தேனி, கரூர், தருமபுரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பிரதேசங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், "இதுவரை நேரடி முகாம்கள், நடமாடும் முகாம்கள் என சுமார் 16,000 முகாம்கள் நடைபெற்று உள்ளன. இதில் குழந்தைகள், கர்ப்பிணிகள் என சுமார் 50,000 பேர் பயனடைந்துள்ளனர்.
மத்திய அரசு சார்பில் 8 மாவட்டங்கள், தமிழக அரசு சார்பில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 15 மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இவை தவிர மீதமுள்ள மாவட்டங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எந்நெந்தப் பகுதிகளில் விடுபட்ட குழந்தைகள் உள்ளன என்று கண்டறியப்படும்.
அந்தப் பகுதிகளில் வழக்கமாக நடைபெறும் முகாம்களைவிட கூடுதலாக சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அனைத்து மாவட்டங்களிலும் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.