தடுப்பூசி தட்டுப்பாடு: 5 மணி நேரத்தில் தி.மு.க. எம்.எல். ஏ. செய்த பேருதவி.. குவியும் பாராட்டு!
மன்னார்குடி: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு கட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வந்ததை அடுத்து தி.மு.க எம்.எல். ஏ. டி.ஆர்.பி ராஜா அதிகாரிகளிடம் தெரிவித்து 5 மணி நேரத்தில் தடுப்பூசி கொண்டு வரச் செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா 2-வது அலை
இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை மிகக் கடுமையாக வீசி வருகிறது. தினமும் 1,30,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இரவு நேர லாக் டவுன், பகல் நேரங்களில் சந்தைகளில் மக்கள் அதிகளவில் கூட கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்கள் எடுத்து வருகின்றன.
தடுப்பூசிகள் இருப்பு இல்லை
இது ஒருபுறமிருக்க நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி முதல் நான்கு நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழாவாக அனுசரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவித்தன. தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, கும்பகோணம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டன.
தி.மு.க எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
இதனால் தடுப்பூசி செலுத்த போன பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜாவும் புகார் தெரிவித்து இருந்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ' மன்னார்குடியில் அமைந்துள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, மற்றும் நகர சுகாதார மருத்துவ நிலையத்திலும் ஞாயிறு (11/04/2021) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி இருப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று கூறி போட்டோ ஒன்றையும் இணைத்திருந்தார்.
|
தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன
தடுப்பூசி இருப்பு இல்லை என்று பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து இருந்ததாலும், தி.மு.க எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாலும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 5 மணி நேரத்திற்குள் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன. இதையும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள டி.ஆர்.பி ராஜா, ' நமது மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு இன்று மதியம் 250 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் தேவைப்படும் தடுப்பூசிகளை தவறாமல் தொடர்ந்து வழங்குமாறு அரசு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் பாராட்டு
தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பான தகவல் வெளியானதும் மன்னார்குடி மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தடுப்பூசி கொண்டு வரச்செய்து எளிய மக்களுக்காக குரல் கொடுத்த தி.மு.க எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.