ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு.. நல்லாண்டார்கொல்லையில் ஒரு மாதமாக தொடரும் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேலாக புதுக்கோட்டை அருகே நல்லாண்டார்கொல்லை என்ற பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிப்புத் தெரிவித்து நெடுவாசல் அருகே உள்ள வடகாட்டில் 16 வது நாளாகவும், நல்லாண்டார்கொல்லை 32 வது நாளாகவும் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நெடுவாசல் சென்று போராட்டக் குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் தமிழக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதனையடுத்து மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் பட மாட்டாது என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்தனர். இதையடுத்து 22 நாட்களாக நெடுவாசலில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் வடகாடு மற்றும் நல்லாண்டார்கொல்லையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடகாட்டில் இன்று 16வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.
நேற்று நடந்த போராட்டத்தில் பருத்திபுஞ்சை, கூட்டான்புஞ்சை, சேர்வைக்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கால்நடைகளுடன் கருப்புக்கொடி மற்றும் தங்கள் பகுதிகளில் விளைந்த வேளாண் பொருட்களை கைகளில் ஏந்தியும், மாணவ, மாணவியர் பேனா, மை, பேப்பர் போன்ற பொருட்களுடனும் பேரணியாக வந்து கலந்துகொண்டனர். பெண்கள் ஒப்பாரி வைத்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நல்லாண்டார்கொல்லையில் இன்று 32வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் இத்திட்டத்துக்கு எதிராக மக்கள் கோஷமிட்டனர். பின்னர் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் ஹைட்ரோ கார்பன் கழிவுகளை கொட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் கிராமமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.