ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்.. செவிடர்கள் காதில் ஊதிய சங்கு.. அலுத்துப் போன மக்கள் நாயிடம் மனு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 17 நாட்களாக போராடி வரும் வடகாடு கிராம மக்கள் இன்று நாயிடம் மனு கொடுத்தனர். அவர்களது போராட்டம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருப்பதால் போராட்டக்காரர்கள் நையாண்டி செ
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் மார்ச் 5 ந் தேதி இருந்து தொடர்ந்து 17 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல் உள்ளிட்ட 6 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து நெடுவாசல் மக்கள் 22 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் நெடுவாசல் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் வடகாடு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து 17 நாட்களாக போராடி வருகின்றனர்.
விவசாயம் பாதிக்காது..
இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படாது என்றும் சுற்றுச்சூழல் மாசடையாது என்றும் பேசினார். இதனால், திட்டம் கைவிடப்படும் என்று எதிர்ப்பார்த்திருந்த புதுக்கோட்டை மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாயிடம் மனு..
இந்நிலையில், வடகாடு கிராமத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகள், இன்று நாயிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். அப்போதாவது மத்திய அரசிடம் இருந்து ஏதாவது பதில் வருகிறதா என்று எதிர்ப்பார்த்து விவசாயிகள் இதனைச் செய்தனர்.
ஊர்வலம்
விளைந்த பயிர்களுடன் போராட்டத்திற்கு வந்த விவசாயிகள், புள்ளாட்சி குடியிருப்பில் இருந்து நாயுடன் ஊர்வலமாக புறப்பட்டு போராட்டத் திடலுக்கு சென்றனர். அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அடுயோடு ரத்து செய் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை நாயிடம் கொடுத்தனர்.
செவிடன் காதில்…
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக வடகாட்டில் 17 நாட்களாக தொடரும் போராட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. அதனால் தான் இதுபோன்ற போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என்பது மத்திய மாநில அரசுகளின் முடிவில்தான் இருக்கிறது என்றும் வடகாடு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.