மதுரை என்கவுண்டர்... நீதிபதி விசாரணை தொடக்கம்!
மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக நீதிபதி விக்னேஷ்மது விசாரணையை தொடங்கியுள்ளார்.
மதுரை: மதுரையில் நேற்று பட்டபகலில் ரவுடிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக வாடிப்பட்டி மாஜிஸ்திரேட் விக்னேஷ்மது விசாரணையை தொடங்கியுள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து நீதிபதி விசாரணை தொடங்கியுள்ளது.
மதுரை திண்டுக்கல் சாலையில் சிக்கந்தர்சாவடியில் நேற்று மாலை குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இருந்த வீட்டிற்குள் வைத்து ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை மாற்று உடையில் இருந்த போலீசார் பிடிக்க முயன்ற போது கைத்துப்பாக்கியால் சுட முயன்றதால் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரவுடிகள் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்தி உயிரிழந்தனர். இதனையடுத்து இருவரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ரவுடிகளை போலீசார் உடம்பின் மற்ற இடங்களில் சுடாமல் நேராக தலையில் சுட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே என்கவுன்டர் தொடர்பாக வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ்மது விசாரணையை தொடங்கியுள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து இந்த விசாரணையானது தொடங்கியுள்ளது.