ஸ்டாலினுக்காக வடிவேலு செய்த "விலை இல்லாத" பிரச்சாரம்!
கொளத்தூர் தொகுதியில் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட போது நடிகர் வடிவேலு இலவசமாக பிரச்சாரம் செய்ததாக திமுக பொருளாளர் ஸ்டாலின் உயர்நிநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக பொருளாளரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதித்து அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி போட்டியிட்டார். இந்த தேர்தலில் அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளராகிய சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக சைதை துரைசாமி தாக்கல் செய்த மனுவில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றியில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த காரணத்தால் அரசாங்க அதிகாரிகள் அவருக்குச் சாதகமாக செயல்பட்டுள்ளனர். எனவே மு.க.ஸ்டாலினுடைய இந்த வெற்றியை நிராகரித்து, செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
நீதிபதி எம்.வேணுகோபால் தலைமையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில் சைதை துரைசாமி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் தரப்பு வாக்குமூலத்தை அளித்து விட்டார். அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் தரப்பு வாக்குமூலத்தை அளித்தார். அதன் பின்னர் சைதை துரைசாமி தரப்பு வக்கீல் மு.க.ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். இதுவரை இரண்டு முறை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் சைதை துரைசாமியின் வழக்கறிஞர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று மூன்றாவது முறையாக குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
குறுக்கு விசாரணை தொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று உயர்நீதிமன்றத்துக்கு வந்தார். நீதிபதி எம்.வேணுகோபால் சரியாக 12 மணிக்கு மு.க.ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணையை தொடங்குமாறு மனுதாரர் வக்கீலிடம் கூறினார்.
வெற்றி பெற்றது எப்படி?
கொளத்தூர் தொகுதியில் 203 ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டதா? 18 வது சுற்றின் முடிவில் 1,700 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தீர்களா? என்று கேட்டதற்கு ஆமாம் என்றார் ஸ்டாலின்.
செலவு செய்தது யார்?
வீதி வீதி, வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்தீர்களா? என்ற கேள்விக்கு, குறிப்பிட்ட வீதிகளில் மட்டுமே சென்றேன். வீடு வீடாக செல்லவில்லை என்றார் ஸ்டாலின்.
தேர்தலின் போது ஒட்டுமொத்த செலவுகளை செய்தது தி.மு.க.வா? அல்லது வேறு யார் மூலமாவா?. என்று கேட்கப்பட்டதற்கு, செலவுகளை செய்ய கட்சியின் சார்பில் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட்டார். அவர் குறித்து தற்போது ஞாபகமில்லை என்று கூறினார்.
சுய உதவிக்குழுக்கள்
அப்போது, மகளிர் சுய உதவி குழு குறித்து கேள்வி கேட்டபோது, ‘1989ஆம் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மகளிர் சுய உதவி குழு தொடங்கப்பட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டு அவை சரி செய்யப்பட்டு, சமூக நலத்துறையிடம் இருந்து அது பிரிக்கப்பட்டு 2007ஆம் ஆண்டு எனது தலைமையில் உள்ளாட்சி துறையின்கீழ் கொண்டு வரப்பட்டது. பெண்கள் சுயமாக சம்பாத்தியம் செய்து தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு அரசு தரப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மகளிர் சுய உதவி குழுவினருக்கு செய்து கொடுக்கப்பட்டது' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
சுய உதவிக்குழுவினருக்கு பணம்
கொளத்தூர் தொகுதியில் உள்ள ஈஸ்வரி மருத்துவமனையில் வைத்து மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு வாக்களிப்பதற்காகப் பணம் கொடுப்பது தொடர்பான வீடியோ போட்டு காண்பிக்கப்பட்டது. அதைப் பார்த்த ஸ்டாலின், இது எங்கே, எந்த இடம் என்று தெரியவில்லை. பெண்கள் இருப்பது தெரிகிறது. ஆனால், அவர்கள் எந்த மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது. மேலும் அவர்கள் கையில் பணம் இல்லை. எனவே பெண்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரம் ஏதும் அதில் இல்லை என்றார்.
வாகனத்தில் பிடிபட்ட பணம்
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 18 லட்சம் குறித்து போலீஸார் விசாரணையில், ‘அந்த பணம் ஜிஎஸ் 4 என்ற ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனம் அந்த பணத்தை கொண்டு சென்றதற்கான முறையான கணக்கைக் காண்பித்து உச்சநீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அந்த பணத்தை திரும்ப பெற்றதாக எனது வக்கீல் மூலமாக அறிந்து கொண்டேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
செலவு தொகை
தேர்தல் செலவு கணக்கில் நீங்கள் தேர்தல் கமிஷன் அனுமதித்ததைவிட அதிகளவில் செலவு செய்தீர்களா?' என்ற கேள்விக்கு பதில் சொன்ன ஸ்டாலின், தேர்தல் கமிஷனின் வரம்புக்குட்பட்டு தகுந்த செலவு மட்டுமே செய்ததாகவும், அதனை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தபோது தேர்தல் கமிஷனும் ஏற்றுக்கொண்டதை தெரிவித்தார். ஸ்டாலின் தேர்தல் செலவு கணக்கு குறித்து தாக்கல் செய்தது தவறு என்று மனுதாரர் வக்கீல் குற்றச்சாட்டு கூறியபோது ஸ்டாலின் அதற்கு மறுப்பு தெரிவித்து முறையாக தாக்கல் செய்த வரவு, செலவு கணக்கை தேர்தல் கமிஷனும் ஏற்றுக்கொண்டதை குறிப்பிட்டார்.
பிரச்சாரம் செய்தது யார்?
அதன் பின்னர் 20.3.2011 முதல் 12.4.2011 வரை திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் ஸ்டாலின் பிரச்சாரம் குறித்தும் அவருக்கு யார், யாரெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் என்றும் கேள்வி கேட்கப்பட்டது. அது குறித்த செய்தி முரசொலியில் வந்துள்ளது என்றும் அது சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியாது என்ற ஸ்டாலின், தனது பிரச்சாரத்துக்கு தனது மனைவியும் வந்ததை குறிப்பிட்டார்.
வடிவேலு பிரச்சாரம்
உங்களுக்காக நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தாரா? என்ற கேள்விக்கு ஆம் செய்தார் என்றும், அவருக்கு பணம் தரப்பட்டதா? என்ற கேள்விக்கு இல்லை என்றும் கூறினார். வடிவேலுவிற்கு வி.எஸ் பாபுதான் பணம் குடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
குறுக்கு விசாரணைகள்
கடந்த முறை குறுக்கு விசாரணையின் போது வி.எஸ்.பாபு, பன்னீர் செல்வம், நடனசபாபதி ஆகி யோரைத் தெரியுமா?. கொளத் தூரில் ஈஸ்வரி மருத்துவமனை எங்குள்ளது?. வெடி வெடிக்கப் பட்டதா?. 2345 என்ற பதிவு எண் கொண்ட கார் யாருடையது? ஆரத்தி எடுக்கப்பட்டதா? என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன. இம்முறையும் வி.எஸ் பாபு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
எதிராக சாட்சியம் சொல்வாரா மாஜி எம்.எல்.ஏ
சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த திமுக மாஜி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு குறித்து கடந்த ஆறு ஆண்டுகளாக சைதை துரைசாமியின் வக்கீல் எந்த கேள்வியும் கேட்காதபோது சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிப்படைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் ஐக்கியமானார். இந்த நிலையில் இந்த குறுக்கு விசாரணை மீண்டும் நடைபெற இருப்பதால், சைதை துரைசாமியின் வக்கீல் ஸ்டாலினுக்கு எதிராக வி.எஸ்.பாபுவை கொண்டு வந்து சாட்சி கூற வைக்கும் நிலை இருப்பதாக தெரிய வருகிறது.
என்னென்ன திருப்பம் ஏற்படுமோ?