ஏரி தூர்வாரும் பணி நடைபெறுகிறது.. மெதுவாக செல்லவும்.. எதுக்கு என்ன போட்டோ? பாருங்க மக்களே!
ஏரி தூர் வாரும் பணி நடைபெறுவதால் மெதுவாக செல்லவும் என வைக்கப்பட்டுள்ள பலகை படம் வைரலாகியுள்ளது.
சென்னை: ஏரி தூர் வாரும் பணி நடைபெறுவதால் மெதுவாக செல்லவும் என வைக்கப்பட்டுள்ள பலகை படம் வைரலாகியுள்ளது.
தஞ்சை - திருவாரூர் சாலையில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது வடுவூர் ஏரி. பறவைகள் சரணாலயமாகவும் உள்ளது இந்த ஏரி.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரி கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனை தூர்வாருமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
ஏரி தூர்வாரும் பணி
இந்நிலையில் வடுவூர் ஏரி தற்போது தூர்வாரப்பட்டு வருகிறது. தூர்வாரப்படும் மண்ணை பொதுமக்கள் டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்கின்றனர்.
வாகனங்கள்
ஜேசிபி எந்திரங்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் வருவதும் போவதுமாக உள்ளன.
மெதுவாக செல்லவும்
இந்நிலையில் அந்த சாலையில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏரியில் தூர்வாரம் பணி நடைபெறுகிறது. மெதுவாக செல்லவும் என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
முனுமுனுக்கும் மக்கள்
அதாவது ஃபிரண்ட்ஸ் படத்தில் வடிவேல், சுவற்றை தேய்க்கும் சூர்யாவை மெல்ல மெல்ல, வலிக்கப்போகுது என கூறும் போட்டோதான் அது. இந்த போட்டோ தூர்வாரும் பணிக்காக போடப்பட்டதா அல்லது மக்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக போடப்பட்டதா என அவ்வழியே கடந்த செல்லும் மக்கள் முனுமுனுத்து செல்கின்றனர்.