வாக்களிக்க வலியுறுத்தி காலவரையற்ற பேசும் விரதம்! மிஸ்டு கால் கொடுக்க நீங்க ரெடியா?
சென்னை: தேர்தலை முன்னிட்டு, புதிய வாக்காளர்களிடையே ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ''வை ராஜா மை'' என்ற பெயரில் 24/7 மணி நேர தொடர் பேசும் மாரத்தான் நடத்தி வருகிறது.
ஆர்.ஜே.விக்னேஷ், அன்புதாசன், கார்த்திக் மற்றும் பலர் இதில் பங்கேற்று பேசிவருகிறார்கள்.
இது குறித்து 'ஸ்மைல் சேட்டை' குழுவினரில் ஒருவரான கலையரசன் கூறியுள்ளதாவது:
சுமார் 1 கோடி புதிய தலைமுறை வாக்காளர்களிடையே ஓட்டு போடுவதன் அவசியத்தை புரிய வைக்க வேண்டும் என்று யோசித்தோம். எங்களின், 7878745566 என்ற தொலைபேசி எண்ணுக்கு ஐந்து லட்சம் மிஸ்ட் கால்கள் வரும் வரை, கடந்த கால தேர்தல் பற்றிய தகவல்கள், அரசியல் வரலாறு, 234 தொகுதிகளின் வேட்பாளர் விவரம் உள்ளிட்ட சுவாரசியமான விஷயங்களைத் தொடர்ந்து 24/7 மணி நேரமும் தொடர்ந்து பேச உள்ளோம்.
சுமார் 120 மணி நேரத்துக்கான தகவல்களைத் தொகுத்து வைத்திருக்கிறோம். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திங்கள்கிழமை, நேற்று, காலை 10 மணிக்கு, 'நாட்டுக்காக காலவரையற்ற பேசும் விரதம்' தொடங்கிவிட்டது. வாசகர்கள் தங்களின் செல்ஃபி வீடியோக்கள், வாட்ஸ்- அப் உரையாடல்கள், சாட்கள், அழைப்புகள் மூலம் குழுவினரை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த உரையாடல்களும் யூடியூப்பில் ஒளிபரப்பப்படுகிறது.
ஐந்து லட்சம் மிஸ்ட் கால்கள் என்பதே இலக்கு. ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து எத்தனை முறை மிஸ்ட் கால் கொடுத்தாலும், ஒரு முறை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறையும் மிஸ்ட் கால்களின் எண்ணிக்கை பதிவேற்றப்படும்.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஆதித்யா தொலைக்காட்சி ஆதவன், உறுமீன் இயக்குநர் சக்திவேல் உள்ளிட்டோர் இந்த குழுவிற்கு ஊக்கமளித்துச் சென்றிருக்கின்றனர்.
நீங்களும் மிஸ்டுகால் கொடுத்து ஊக்கம் தரலாமே..