ஆவின் பாலில் கலப்படம்- அதிமுக பிரமுகர் வைத்தியநாதனை விடுதலை செய்தது ஹைகோர்ட்!
ஆவின் பாலில் கலப்படம் செய்த வழக்கில் இருந்து அதிமுக பிரமுகர் வைத்தியநாதனை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : ஆவின் பாலைத் திருடி அதில் கலப்படம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தென்சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் வைத்தியநாதனை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னை ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்ட டேங்கர் லாரிகளில் இருந்து பாலை திருடி, அதற்கு பதிலாகத் தண்ணீரை கலப்படம் செய்த வழக்கில் அப்போதைய அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி, வைத்தியநாதன் அவரது மனைவி ரேவதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆவின் பால் கலப்பட வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனவும், ஆதாரம் இல்லாமல் வழக்கை நடத்துவது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் நீதிபதி செல்வம் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் இருந்து வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகிய இரண்டு பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.