சினிமா போஸ்டர் ஒட்டியவர் சினிமா துறைக்கே அமைச்சர்- ராஜேந்திர பாலாஜி மீது வைகைச் செல்வன் பாய்ச்சல்
சினிமா போஸ்டர்களை ஒட்டுவதற்காக தூக்கிய பசைவாளியை கீழே வைக்காமல் இருந்தவர்தான் இன்றைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என வைகைச்செல்வன் சாடியுள்ளார்.
சென்னை: தூக்கிய பசை வாளியை கீழே வைக்காமல் சினிமா போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்தான் சினிமா துறைக்கே அமைச்சராகியிருக்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சாடியுள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன்.
அதிமுகவில் தினகரன் மற்றும் எடப்பாடி கோஷ்டிகளிடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை இரு கோஷ்டிகளும் இடையே இருந்த பனிப்போர் இப்போது பகிரங்கமாக வெடித்துள்ளது.
தினகரனின் தீவிர ஆதரவாளரான வைகைச் செல்வனை, ரூ500க்கு பேசும் கூலிப் பேச்சாளர் என சாடியிருந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதற்கு பதிலடி கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார் வைகைச் செல்வன்.
அதில், சினிமா போஸ்டர் ஒட்டுவதற்காக தூக்கிய பசை வாளியை கீழே வைக்காமல் வலம் வந்தவர்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அப்படி சினிமா போஸ்டர் ஒட்டியவரை சினிமா துறைக்கே அமைச்சராக்கியதுதான் திராவிட இயக்கம் செய்த ஜாலம்.
கூலிக்கு தாம் பேசுவதாக ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துவதாகும். அவரை மன்னிக்க எனக்கு திராவிட இயக்கம் கற்றுக் கொடுத்திருக்கிறது... ஆகையால் ராஜேந்திர பாலாஜியை மன்னிக்கிறேன் என கூறியுள்ளார் வைகைச் செல்வன்.