ஆமாம்..என் மகன் புகையிலை கம்பெனி நடத்துவது உண்மை தான்... அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு வைகோ பதில்
நெல்லை: தன்னுடைய மகன் வையாபுரி புகையிலை கம்பெனி ஏஜென்சி எடுத்து நடத்தி வருவது உண்மை தான் என்றும், தமிழக அரசு சிகரெட்டை தடை செய்தால் அவரது கம்பெனியும் மூடப்படும் எனவும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பதிலளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இன்று நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்கு சென்றார். அங்கு வைகோவின் தாயார் மாரியம்மாள், நல்லகண்ணுவுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் கலிங்கப்பட்டியில் நடந்த மதுக்கடை போராட்டத்தில் காயம் அடைந்த வைகோவின் தம்பி ரவிச்சந்திரனை சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.
தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது...
அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்கள் புகையிலை கம்பெனி நடத்தி வருகிறார்கள் என கூறியுள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு முதல் எனது மகன் பெயரில் புகையிலை கம்பெனி ஏஜென்சி நடத்தப்பட்டு
வருகிறது. அந்த கம்பெனியின் பங்குதாரராக நான் இல்லை.
எனது மகன்தான் அதில் உள்ளார். நான் பினாமி பெயரில் தொழில் செய்யவில்லை. தமிழக அரசு சிகரெட்டை தடை செய்தால் உடனே எனது மகன் நடத்தி
வரும் புகையிலை கம்பெனியை மூடி விடுவோம்.
மது ஒழிப்புக்கு ஆதரவாக நடந்து வரும் மாணவர் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்கியது தவறு. தற்போது டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி காந்திய
வழியில் போராடி வருகிறோம். தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்காத நிலையில் இன்று நடைபெற்ற போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட மறுத்தால் பகத்சிங் வழியில்
போராடுவோம்.இவ்வாறு வைகோ கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பேசியதாவது..
தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. மாதம் ரூ.30 ஆயிரம் கோடி அரசுக்கு மதுக்கடைகள் மூலம் வருமானம் கிடைக்கிறது. இந்த பணம் ஏழை மக்கள் மூலம் அரசுக்கு கிடைக்கிறது.
எனவே, ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உடனே டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவுக்கு எதிராக போராடிய வைகோ மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு நல்லக்கண்ணு கூறினார்.