பேராசிரியர் ஜெயராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டம்: வைகோ பகீர் குற்றச்சாட்டு!
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த வருகின்றனர்.
பேராசிரியர் ஜெயராமன் உட்பட கிராம மக்கள் 10 பேரை விடுவிக்கக்கோரி கதிராமங்களத்தில் நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டம் இன்று 10வது நாளை எட்டியுள்ளது.
மயங்கி விழுந்த வைகோ
இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கதிராமங்கலத்திற்கு பேரணியாக சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, வைகோ திடீரென மயங்கி விழுந்தார்.
பொருட்படுத்தாது மீண்டும் உரை
அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கிப் பிடித்து ஆசுவாசப்படுத்தினர். சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து எழுந்த வைகோ, அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் ஆதரவுக் கூட்டத்தில் பேசினார்.
எதிராக போராட வேண்டும்
இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக அனைத்து கட்சியினரும் இணைந்து போராட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்
பேராசிரியர் ஜெயராமன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.