மீத்தேன் எரிவாயு வழக்குகளில் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு ஆலோசகராக செயல்படுவார் வைகோ
சென்னை: மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு எதிரான வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆலோசகராக செயல்படுவார் என்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
இன்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் திருவைகுண்டம் அணை தூர் வாரும் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஜோயல் சார்பில் வைகோ ஆஜரானார்.
திருவைகுண்டம் அணை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுவதற்கு முன்பு, மீத்தேன் எரிவாயு குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இது விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு ஆகும். இந்த வழக்கில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கமித்திரை, "மீத்தேன் திட்டத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" என்று கூறினார்.
அப்பொழுது வைகோ, "மீத்தேன் எரிவாயுத் திட்டம், காவிரி தீரத்தை அடியோடு பாழாக்கும் திட்டம் ஆகும். அதிக ஆழத்தில் குழிகளைத் தோண்டி 635 நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களைத் தண்ணீரோடு கலந்து பலத்த அழுத்தம் கொடுத்துச் செலுத்தப் போகிறார்கள். அதனால் விளைநிலங்கள் பாழாகும். தண்ணீர் நஞ்சாகும்; கட்டடங்கள் இடியும்.
அதனால்தான், அமெரிக்காவில் நியூ யார்க் மாநில ஆளுநர் 2014 டிசம்பர் 17 இல் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை, நியூயார்க் மாநிலம் முழுமையும் தடை செய்து விட்டார். மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கிரேட் ஈடர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு ஒப்பந்தம் செய்தது.
நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் திட்ட அபாயம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, இடைவிடாது ஒரு மாத காலம் ஊர் ஊராகச் சென்று நான் பிரச்சாரம் செய்தேன்; மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தத் திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை. கிரேட் ஈடர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் அறிவித்த காலத்திற்குள் மீத்தேன் எரிவாயு திட்டத்தைத் தொடங்காததால், அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் மீத்தேன் எரிவாயு திட்டத்தைக் கைவிடவில்லை.
தற்போது, மேற்கூறிய மூன்று மாவட்டங்களிலும், இராமநாதபுரம் சிவகங்கை அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களிலும் மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் மூலமாக மீத்தேன் எரிவாயுக் கிணறுகளைத் தோண்டுவதற்கு ஏற்பாடுகளைத் தந்திரமாகச் செய்து வருகிறது. இதனை விவசாயிகளும், பொதுமக்களும், நாங்களும் எதிர்க்கிறோம். எனவே, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தேசிய தீர்ப்பு ஆயம் தடை விதிக்க வேண்டுகிறேன்" என்று தெரிவித்தார்.
இதன்பின் அந்த அமர்வில் இருந்த நீதியரசர் ஜோதிம , தொழில் நுணுக்க நிபுணர் நாகேந்திரன் ஆகியோர் கலந்து பேசி, "மீத்தேன் எரிவாயு வழக்கில் பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்கு, வைகோ ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அறிவித்தனர்.
மீத்தேன் வழக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.