செண்பகவள்ளி அணையை சீரமைக்க கோரி வைகோ உண்ணாவிரதம்
திருநெல்வேலி: செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்யக்கோரி திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள செண்பகவள்ளி அணை மூலம் சுற்றுப்பகுதி விவசாயம் நடைபெறுகிறது. இந்த அணையின் தடுப்புச்சுவர் உடைந்துள்ளதால் பாசன விவசாயம் பெரிதும் பாதித்துள்ளது என்பது விவசாயிகளின் புகாராகும்.
அணைய சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. எனவே செண்பகவள்ளி அணையின் தடுப்புச்சுவரை சீரமைக்க கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று (ஜனவரி 28) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் முகைதீன் பள்ளி மாணவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக், விடுதலை சிறுத்தைகள், உள்ளாறு குறிஞ்சான்குளம் பாசன விவசாயிகள் சங்கத்தினர், வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்வகள், நகை வணிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் வைகோ உண்ணாவிரதத்துக்கு வாழ்த்துக் கூறினர்.
இதில் டாக்டர் ப.ஆ.சரவணன், சதன் திருமலைக்குமார், எஸ்.பெருமாள், தி.மு.இராசேந்திரன், கே.எம்.ஏ.நிஜாம், மின்னல் முகமது அலி, எழுத்தாளர் மதுரா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசுதேவநல்லூர் பயணியர் விடுதி முன்பு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு ஜனவரி 3 ஆம் தேதி வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து நீதிமன்றம் தலையிட்டு பயணியர் விடுதி முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்து, மனுதாரர் மாற்று இடத்தை தேர்வு செய்து, மீண்டும் புதிதாக மனு செய்ய வேண்டும். அந்த மனுவை பரிசீலித்து போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது.