சசி பெருமாள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
சேலம்: சசிபெருமாள் குடும்பத்துக்கு மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் நிதியுதவி அளித்துள்ளது. முதல் தவணையாக ரூ.5 லட்சம் வழங்குவதாக வைகோ அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தி உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாள் உடல் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வைக்கப்பட்டுள்ளது.
சசி பெருமாளின் கோரிக்கையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அப்போது தான் அவரது உடலை பெற்றுக்கொள்வோம் என்று அவரது மனைவி மகிழம், மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டுக்காட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே இன்று வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் சசிபெருமாள் குடும்பத்துக்கு மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் சார்பில் நிதியுதவி அளிப்பதாகவும், முதல் தவணையாக ரூ.5 லட்சம் வழங்குவதாகவும் வைகோ அறிவித்துள்ளார்.
சசிபெருமாள் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தமிழக வாழ்வுரிமைக்கட்சித்தலைவர் வேல்முருகன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.