நக்கீரன் கோபாலுக்காக வாதாடி கைதான வைகோவும் விடுதலை
Recommended Video
சென்னை: நக்கீரன் ஆசிரியர் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததை எதிர்த்து போராட்டத்தில் குதித்து கைதான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் விடுதலை செய்யப்பட்டார்.
நக்கீரன் கோபாலை இன்று திடீரென போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். தகவல் அறிந்து அங்கு பத்திரிகையாளர்கள் திரண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அங்கு விரைந்து வந்தார்.
கோபாலைப் பார்க்க வக்கீலாக வந்துள்ளதாக கூறினார். ஆனால் போலீஸார் அதை ஏற்க மறுத்து அனுமதிக்கவில்லை. இதனால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வைகோ. இந்த நிலையில், போலீஸார் கோபாலைப் பார்க்க தன்னை அனுமதிக்காததைத் தொடர்ந்து அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ சாலையில் அமர்ந்து தர்ணாவில் குதித்தார். அவருடன் பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து போலீஸார் வைகோவை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி கைது செய்து அப்புறப்படுத்தினர். வேனில் ஏற்றி வைகோவை கொண்டு சென்று விட்டனர். கல்யாண மண்டபத்தில் அவரை தங்க வைத்தனர். இந்த நிலையில் நக்கீரன் கோபால் விடுதலையானதைத் தொடர்ந்து வைகோவையும் விடுதலை செய்தது போலீஸ்.
[ஒன்று திரண்ட ஊடகவியலாளர்கள்.. நக்கீரன் கோபால் கைதுக்கு எதிராக போராட்டம்!]