இளங்கோவனுக்கு எதிராக கொந்தளிக்கும் அதிமுக மத்திய அமைச்சரை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்? வைகோ
கரூர் : ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.வினர் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர், பெரியதிருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது...
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து வீதி வீதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர் அதிமுகவினர். காவிரியின் குறுக்கே அணைகளை கட்டியே தீருவோம். இரண்டு அணைகளை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என்று சொல்லுவது பொறுப்புள்ள மத்திய சட்ட அமைச்சர் சதானந்தா கவுடா.
நான் கேட்கிறேன் அதிமுக தோழர்களை... தமிழகத்தின் வாழ்வையே அழிக்கக் கூடிய வகையில் பேசிய அந்த மத்திய சட்ட அமைச்சரை கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினீர்களா?
அதிமுகவினர் வன்முறை வெறியாட்டத்தை தூண்டி போராட்டம் நடத்தி வரும் நிலையில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருப்பது ஆபத்தானது.
இவ்வாறு வைகோ கூறினார்.