நான் வேண்டும் என்றே ஜெயிலுக்கே போக இதுமட்டுமே காரணம்... வைரலாகும் வைகோ வீடியோ
தாம் சிறைக்கு போவதற்கு காரணமே ஈழத் தமிழர் படுகொலைக்கு திமுக துணை போனது என்பதை அம்பலப்படுத்தவே என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: 2009-ம் ஆண்டு ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு திமுக துணை போனதை அம்பலப்படுத்தவே தாம் சிறைக்குப் போகிறேன் என மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று திடீரென சென்னை எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார்.
தம் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்; இல்லையெனில் கைது செய்து சிறையில் அடையுங்கள் என வைகோ ஒரு பரபரப்பான மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையின் முடிவில் வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதாக நீதிபதி கோபிநாத் தெரிவித்தார்.
சிறையில் வைகோ
அத்துடன் வைகோ சொந்த ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதி கோபிநாத் கூறினார். ஆனால் வைகோ தாம் ஜாமீனில் செல்ல முடியாது; சிறைக்குப் போகிறேன் என்றார். இதையடுத்து வைகோ கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீடியோ
சிறைக்கு செல்வதற்கு முன்பாக வைகோ ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வைகோ கூறியிருப்பதாவது: 2009-ல் என் மீது கருணாநிதி ஆத்திரத்துடன் 5 மாதங்கள் கழித்து எப்.ஐ.ஆர். போட்டு ஒரு ஆண்டு கழித்து சார்ஜ் சீட் போட்டார்.
நெடுமாறன், இன்குலாப்
குற்றம்சாட்டுகிறேன் என்ற புத்தகத்தை நான் எழுதினேன். இதை வெளியிட்டவர் பழ. நெடுமாறன்; வாங்கியவர் மறைந்த லட்சியக் கவிஞர் இன்குலாப். அந்த நிகழ்ச்சியில் பேசியதற்காக என் மீது 124A தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மக்களிடையே மோதலை ஏற்படுத்திய பிரிவின் கீழும் வழக்கு தொடரப்பட்டது.
உண்மை தெரிந்தாக வேண்டும்
நாட்டு மக்களுக்கும் இளைஞர்களுக்கும் உண்மை தெரிந்தாக வேண்டும். லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதிருந்த திமுக சர்க்கார், இன்றைய செயல் தலைவர்.... முதல்வராக 6 மாதத்துக்குள் வருவேன் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் இவரும் சேர்ந்துதான் அந்த லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்வதற்கு இந்திய அரசு உதவியது. இனப்படுகொலையை இனத்துரோகத்தைச் செய்த இவர்களுக்கே மன்னிப்பே கிடையாது. இந்த உண்மை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதால்தான் நான் ஜாமீன் போடவில்லை.
இவ்வாறு வைகோ அந்த வீடியோவில் கூறியுள்ளார்.