சென்னையில் இன்று முரசொலி பவளவிழா... வைகோ உட்பட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் பங்கேற்பு
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியின் பவளவிழா பொதுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக பங்கேற்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முரசொலியின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. கடந்த மாதம் 11-ந் தேதியன்று நந்தனத்தில் நடைபெற்ற விழாவின் போது மழை குறுக்கிட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த பொதுக்கூட்டம் இன்று சென்னை கொட்டிவாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக திமுகவை வைகோ கடுமையாக எதிர்த்து வந்தார். காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பார்க்க சென்ற வைகோவுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அண்மையில் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சென்று பார்த்து வைகோ நலம் விசாரித்தார். அப்போது செப்டம்பர் 5-ந் தேதி நடைபெறும் முரசொலி பவள விழாவில் தாம் பங்கேற்க உள்ளதாக வைகோவும் தெரிவித்தார். அதேபோல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஸ்டாலின் நேற்று சென்று பார்வையிட்டார்.