ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க வைகோ ஜெனீவா பயணம்!
ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வைகோ ஜெனீவா சென்றடைந்தார்.
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலர் வைகோ ஜெனீவா சென்றடைந்தார். ஜெனீவா விமான நிலையத்தில் ஈழத் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வைகோவை வரவேற்றனர்.
சுவிஸின் ஜெனீவா நகரில் நாளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான ஐ.நா. குழுவின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏற்கனவே இலங்கையில் இருந்து தமிழர் பிரதிநிதிகள் ஜெனீவா சென்றுள்ளனர். இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஜெனீவா சென்றுள்ளார்.
சென்னையில் இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, துபாய் வழியாக ஜெனீவா விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.30 மணிக்கு வைகோ சென்றடைந்தார். அங்கு ஈழத் தமிழர்கள் அமைப்புகளின் சார்பில் சுஜானி ஜீவானந்தம், போஸ்கோ, சஞ்சயன், காண்டீபன். பிரகலாதன், கர்ஜன், ந.பிரபாகரன், அ.பிரபாகரன், கஜன், பாஸ்கரன், ரவிக்குமார், தனுசிகன், ஜீவா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வைகோவுக்கு அழைப்புக் கொடுத்து ஏற்பாடு செய்த அமைப்புகளான பாரதி பிரான்ஸ் தமிழர்கள் கலை மன்றம், தமிழ் உலகம், தென்றல், பிரான்ஸ் தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர் அமைப்பு, பக்கத்தைத் திருப்புவீர் அமைப்பு, சுவிஸ் ஈழத் தமிழர் பேரவை, சுவிட்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரான்ஸ் அனைத்துலக மனித உரிமைச் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
ஜெனிவாவில் நாளை பகல் 2 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்டமான ஈழத்தமிழர் பேரணியில் வைகோ பங்கேற்கிறார். மனித உரிமைக் கவுன்சில் அமர்வு 29ஆம் தேதி முடிந்த பின்னர், அக்டோபர் 1 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வைகோ சென்னை திரும்புகிறார்.