நேற்று தஞ்சையில் காவிரிக்காக போராட்டம்.. இன்று கோவையில் மது ஒழிப்பு கோரி மராத்தான்.. வைகோ!
கோவை: காவிரியில் அணை கட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து நேற்று டெல்டா பகுதியில் மாபெரும் ஆராப்பாட்டம் நடத்திக் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை கோவை வந்து அங்கு மது விலக்கை வலியுறுத்தி பிரமாண்ட மராத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
நேற்று கொட்டும் மழையில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாட்கத்தைக் கண்டித்து தஞ்சையில் போராட்டம் நடத்தினார் வைகோ. அவருடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு பின்னர் இரவில் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து தஞ்சையிலிருந்து இரவே கிளம்பி கோவை வந்தார் வைகோ.
இன்று காலை கோவையில் மராத்தான் ஓட்டப் போட்டியை அவர் தொடங்கி வைத்தார்.
இது தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரி மதிமுக ஏற்பாடு செய்திருந்த மராத்தான் ஓட்டமாகும்.
ஆயிரக்கணக்கானோர் இந்த மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். சிக்கென்ற டிசர்ட், பேன்ட்டில் கலக்கலாக காணப்பட்டார் வைகோவும். கோவை சுந்தராபுரத்தில் துவங்கி மதுக்கரை மார்க்கெட் வரை இந்த ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்,பொதுமக்கள் என சுமார் 5000 பேர் பங்கேற்றனர்.
ஓட்டத்தைத் தொடங்கி வைத்து தானும் ஓடி ஓட்டத்தில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினார் வைகோ.