என்னது வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா? கலெக்டரிடம் புகார் கொடுத்த அர்ஜுன் சம்பத்
கோவை: வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக பொய் தகவலை கூறி கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் மக்களிடம் மதமாற்றம் செய்து வருவதாக கூறி இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், கோவை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட கலெக்டரிடம் வைகோ மதம் மாறிய விவகாரம் தொடர்பாக ஒரு மனு அளித்தனர்.
இதுகுறித்து அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஜெபக்கூடம் நடத்தி வரும் கிறிஸ்தவ மத போதகர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், அவரது குடும்பத்தினர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருவதாகவும் கூறி மத பிரசாரம் செய்து வருகிறார்.
வைகோ தினமும் பைபிள் படிக்க கற்று வருவதாகவும் அவர் பிரசாரம் செய்துள்ளார். ஆனால் இதனை வைகோ மறுத்துள்ளார். அப்படியானால், மத பிரசங்கி உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறாரா? இவ்வாறு கூறி அப்பகுதி மக்களை மதமாற்றம் செய்து வருகிறாரா?
எனவே மத பிரசங்கி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.