நியூட்ரினோ ஆய்வு எதிர்ப்பு நடைப்பயணம்: மதுரை செக்கானூரணி 2-ம் நாள் பயணத்தை தொடங்கினார் வைகோ
நியூட்ரினோ ஆய்வு எதிர்ப்பு நடைப்பயணம் செக்கானூரணியில் இருந்து இரண்டாம் நாள் பயணத்தை வைகோ தொடங்கினார்.
மதுரை : தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விழிப்புணர்வு நடைபயணத்தை நேற்று துவக்கினார். அதன் இரண்டாம் நாளான இன்றும் மதுரை மாவட்டம் செக்கானூரணியில் இருந்து தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு எதிராக விழிப்பு உணர்வு நடைபயணத்தை நேற்று மதுரையில் துவங்கினார். அவருக்கு வழி நெடுகிலும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்வு அளித்தனர்.
மதுரையில் இருந்து விராட்டிபத்து, அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டை, கீழக்குயில்குடி காமராஜர் பல்கலைக்கழகம் வழியாக நேற்று இரவு வைகோ செக்கானூரணி சென்றடைந்தார். நேற்று இரவு செக்கானூரணியில் தங்கிய அவர், அங்கு நடந்த விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும், மதுரை கூட்டத்தில் சிவகாசியைச் சேர்ந்த கட்சி நிர்வாகி ரவி தீக்குளித்த சம்பவத்தை குறிப்பிட்ட வைகோ, தொண்டர்கள் யாரும் இது போன்ற முடிவை எடுக்கக்கூடாது. நாம் எப்போதும் உறுதியாகப் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் அமைந்தால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனி மக்களுக்கும், தமிழக மக்களும் துரோகியாகிவிடுவார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று காலை வைகோ செக்கானூரணியில் இருந்து இரண்டாம் நாள் நடைபயணத்தை துவங்கினார். அங்கிருந்து, கருமாத்தூர், செல்லம்பட்டி, வாலாந்தூர், குப்பணம்பட்டி வழியாக உசிலம்பட்டியில் இன்று இரவு தங்கி, அங்கு நடக்கும் விழிப்பு உணர்வு கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.