வந்தார் வைகோ… இடத்தை காலி செய்த குஜராத் மீத்தேன் நிறுவனம்!
தஞ்சாவூர்: டெல்டாமாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வைகோ விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேசன் நிறுவனத்தின் அலுவலகம் தஞ்சையில் இருந்து முழுமையாக காலி செய்துவிட்டு கிளம்பியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும், மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்பதற்குமான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை 12.12.2014 அன்று தொடங்கி, 22.12.2014 வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வைகோ மேற்கொண்டு வருகிறார்.
பென்னிகுயிக்
வீரியங்கோட்டை, உடையநாடு ஆகிய ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ அவர்களைப் பார்த்த பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்து ஆர்வத்தோடு அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி, தமிழகத்தின் பென்னி குயிக் வைகோ என்று புகழாரம் சூட்டினார்.
மக்களோடு மக்களாக
காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பணை கட்டும் செயலை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடுத்திட வேண்டியும் தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்க வேண்டியும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மக்களோடு கலந்துரையாடி வருகிறார். அய்யம்பேட்டை மதகடி பஜாரில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தஞ்சை பாலைவனமாகும்
தஞ்சையை பாலைவனமாக்கும் நோக்கத்தோடு கர்நாடகா அரசு ஒரு வஞ்சக திட்டத்தை தீட்டி வருகிறது. காவிரியின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டி வருகிறது. இதன் மூலம் கர்நாடகத்தில் 11 லட்சம் ஏக்கர் புதிய விவசாய நிலங்களை உருவாக்க கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இந்த செயல் சுப்ரீம் கோர்ட் மற்றும் நடுவர் மன்ற தீர்ப்பை மீறிய செயல்.
அனைத்து கட்சி கூட்டம்
இந்த பிரச்சனையில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக முதல்வருக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அந்த கூட்ட முடிவின்படி அனைத்து கட்சியினரும் பிரதமரை சந்தித்து கர்நாடகத்தின் அத்து மீறிய செயலை தடுக்க வேண்டும். அதே போல் தஞ்சையின் நஞ்சை நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தினால் விவசாயம் ஒழிந்து வியாபாரமும் பாதிக்கும் நிலை ஏற்படும்.
மூடப்பட்ட மீத்தேன் அலுவலகம்
நமது ஒருங்கிணைந்த தொடர் போராட்டத்தினால் தஞ்சையில் இயங்கி வந்த மீத்தேன் அலுவலக அறை இழுத்து மூடப்பட்டது. தமிழகத்தில் எங்குமே மீத்தேன் எரி வாயு எடுக்க நாம் அனுமதிக்க கூடாது. அதே போல தமிழகத்தில் ஆறாக ஓடும் மதுக்கடைகளை இழுத்து மூட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பெண்களின் கண்ணீரை துடைக்க தமிழகத்திலிருந்து மதுவை ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது இவ்வாறு அவர் பேசினார்.
வைகோவிற்கு வரவேற்பு
அம்மாபேட்டைக்கு வந்த ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவிற்கு அம்மாபேட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருமணம் நடத்தி வைத்த வைகோ
இன்று தஞ்சை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நீலத்தநல்லூரில், கும்பகோணம் ஒன்றியப் பொருளாளர் இராசேந்திரன் மகன் பிரபாகரன்-சரண்யா திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்கள் அறிவுச் செல்வங்களைப் பெற்று பல்லாண்டு காலம் நலமுடனும், வளமுடனும் வாழ வாழ்த்தினர்.
காவிரிக்கரையில் வைகோ
டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வரும் வைகோ நேற்று இரவு கும்பகோணத்தில் தங்கியிருந்தார். இன்று காலையில் நடைபயிற்சி சென்றபோது கும்பகோணம் அருகில் காவிரிக்கரையில் நின்று பாய்ந்து வரும் தண்ணீரை கண்டு ரசித்தார்.
காலி செய்த மீத்தேன் நிறுவனம்
வைகோவின் விழிப்புணர்வு பிரச்சாரம் போகும் இடங்களில் எல்லாம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேசன் நிறுவனத்தின் அலுவலகம் தஞ்சையில் இருந்து முழுமையாக காலி செய்யப்பட்டது.
ஏற்றப்பட்ட பொருட்கள்
தமிழக அரசுடன், மீத்தேன் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் வரும் ஜனவரி 4-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ளதாக கருதப்படுகிறது. இதையடுத்து தஞ்சையில் கடந்த ஒராண்டாக மூடப்பட்ட மீத்தேன் ஆய்வு அலுவலகத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, அனைத்துப் பொருட்களும் லாரியில் எடுத்து செல்லப்பட்டன.
விவசாயிகள் கொண்டாட்டம்
மீத்தேன் ஆய்வு அலுவலகம் காலி செய்யப்பட்டதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தினால் தஞ்சை டெல்டா பாசனப் பகுதிகள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.