ஆர்.கே.நகரில் திமுகவிற்கு ஆதரவாக பிரசாரம்... டிச.11 பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு - வைகோ
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போவதாக வைகோ கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் டிசம்பர் 11ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் பங்கேற்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காலியாக உள்ள ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு எதிராக தினகரன் களத்தில் இருந்தாலும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஸ்டாலின் அறிவிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரசாரப் பொதுக்கூட்டம் டிசம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மாபெரும் பொதுக்கூட்டம்
இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார்.
பொதுக்கூட்டத்தில் வைகோ
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, டிசம்பர் 11ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் திமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உதயசூரியனை பிடித்த வைகோ
கடந்த 2006ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்து விலகினார் வைகோ. அது முதலே உதயசூரியனுக்கு எதிராகவே வாக்கு சேகரித்தார் வைகோ. 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உதயசூரியனுக்கு வாக்கு கேட்கப் போகிறார் வைகோ.