என்.எல்.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் போராட்டம் வெடிக்கும்- வைகோ ’வார்னிங்’
பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.,யின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவிற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், 'பொதுத்துறை நிறுவனங்களில் 'நவரத்னா' தகுதியைப் பெற்று சிறப்பாக இயங்கி வரும் என்.எல்.சி. நிறுவனம், தமிழகத்திற்கும், தென் மாநிலங்களுக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்து குறைந்த விலையில் வழங்கி, வளர்ச்சி பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறது.
1956ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்த நிதியாண்டில் 2342.9 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. நிலக்கரி உற்பத்தி, அனல்மின் உற்பத்தியில் 14% வளர்ச்சி அடைந்துள்ளது. அனல், சூரிய ஒளி, காற்று மூலம் 4301 மெகாவாட் மின் உற்பத்தி திறன் படைத்துள்ளது. இத்தகைய சிறப்புடைய நிறுவனத்தின்15% பங்குகளை ஏன் தனியாருக்கு விற்க வேண்டும்' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
முதல்கட்டமாக 5% விற்பனை
மேலும் இன்று முதல் 5% பங்குகள் விற்கப்பட்டு அதன் மூலம் 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் 72 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும், கடந்த ஆண்டில் 30 ஆயிரம் கோடி திரட்டப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பெருமையுடன் கூறி இருக்கிறார்.
சூறையாடும் முடிவு
இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றிய பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடி, தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு மோடி அரசு துடித்துக்கொண்டு இருக்கிறது. ‘மேக் இன் இந்தியா', ‘ஸ்டார்டப் இந்தியா' என்று பன்னாட்டு நிறுவனங்களை அழைக்கும் மோடி அரசு, சாதனை படைத்து வருகின்ற என்.எல்.சி., பெல், என்.டி.பி.சி., என்.எச்.பி.சி. போன்ற பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது எதற்காக? என்று வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
வாஜ்பாய் அரசை எதிர்த்தேன்
மேலும், ‘என்.எல்.சி. நிறுவனத்தின் 51% பங்குகளை வாஜ்பாய் அரசு 2002 ஆம் ஆண்டு விற்பனை செய்ய முடிவு எடுத்தபோது, நாடாளுமன்றத்திலேயே அதை எதிர்த்தேன். அப்போது பலரும் தனியார் மயமாக்கலை எதிர்த்தார்கள். அதை உணர்ந்து அவரும் அந்த திட்டத்தைக் கைவிட்டார்'.
போராட்டம் வெடிக்கும்
'என்.எல்.சி பங்குகளை விற்க்கும் முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து மத்தியரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்' என்று அந்த அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.