For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்முறை கும்பலை கைது செய்யாமல் தி.கவினர் மீது தடியடி நடத்துவதா?: வைகோ கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் காவல்துறை இந்துத்துவ மதவெறிக் கும்பலைத் தடுத்து நிறுத்தாமலும், பெரியார் திடலுக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய சிவசேனா தொண்டர்களைக் கைது செய்து கடமை ஆற்றாமலும் வேடிக்கை பார்த்துள்ளனர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

திராவிடர் கழக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய மதவெறி அமைப்புக்களைச் சார்ந்தோரைக் கைது செய்து சிறையில் அடைப்பதுடன், இனியும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Vaiko condemns police lathi charge against DK’s men

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திராவிடர் கழகம் கடைபிடித்து வருகின்ற கொள்கைகளின் அடிப்படையில், அண்ணல் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தது. அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படை உரிமைகளான கருத்து உரிமை, பேச்சுஉரிமை திராவிடர் கழகத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக் கறி உணவு அருந்தும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டன.

தமிழக அரசு காவல்துறை இந்த நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது மட்டும் அன்றி, காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

எனவே, பெரியார் திடலில் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று காலையில் நிகழ்ச்சிகள் தொடங்கி நடத்தப்பட்டன. தமிழக அரசின் மேல்முறையீட்டின்பேரில், உயர்நீதிமன்றம் மற்றொரு உத்தரவு பிறப்பித்ததால், காலை 10 மணி அளவில் பெரியார் திடலில் நடைபெற்று வந்த நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு, திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

இதற்கு இடையே சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரியார் திடலுக்குள் நுழைந்து வன்முறைத் தாக்குதலில் இறங்கி உள்ளனர். திராவிடர் கழக அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பெரியார் திடலுக்குள் நுழைந்த மதவெறிக் கும்பல் திராவிடர் கழகத் தொண்டர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி அராஜகம் செய்துள்ளனர்.

தமிழக அரசின் காவல்துறை இந்துத்துவ மதவெறிக் கும்பலைத் தடுத்து நிறுத்தாமலும், பெரியார் திடலுக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய சிவசேனா தொண்டர்களைக் கைது செய்து கடமை ஆற்றாமலும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

ஆனால், தங்கள் மீது தாக்குதல் நடத்த வந்த சிவசேனா, இந்துத்துவ வெறியர்களைத் தடுத்த திராவிடர் கழகத் தோழர்கள் மீது , காவல்துறை ஒருதலைபட்சமாக தடியடி நடத்தி இருக்கின்றது. இதில் படுகாயமுற்ற 15-க்கும் மேற்பட்ட திராவிடர் கழகத் தோழர்களைக் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் வேலூர் சிறையில் அடைத்துள்ள செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது.

பெரியார் திடலுக்குள் நுழைந்து மதவெறி கும்பல் தாக்குதல் நடத்த முயன்ற நிகழ்வு மிகவும் கவலை அளிக்கின்றது. தமிழ்நாட்டில் இந்துத்துவ, மதவெறி சக்திகளுக்கு எதிராக, கூர்மையான எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் கழகத் தோழர்களை உடனடியாகத் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். திராவிடர் கழக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சிவசேனா மதவெறி அமைப்புக்களைச் சார்ந்தோரைக் கைது செய்து சிறையில் அடைப்பதுடன், இனியும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
Vaiko condemned against to lathicharge to Shiva sena and DK’s protestors and a few persons were injured. A violent clash broke out between members of the Dravidar Kazhagam and the Shiv Sena outside the former’s headquarters on EVK Sampath Salai in Vepery on Tuesday afternoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X