திமுக ஆட்சியை பிடிப்பது நிச்சயம்... ஸ்டாலின் முதல்வராவது சத்தியம்.. வைகோ
தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிப்பது நிச்சயம் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவதும் நிச்சயம் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியை நிச்சயம் பிடிக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் முதல்வராவார் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ கூறுகையில், திராவிட இயக்கத்தின் ஈட்டி முனையாக உள்ள திமுகவை வீழ்த்த முடியாது.
இந்தியா என்பது பல தேசிய இனங்களை கொண்ட நாடு. எனவே மதசார்பின்மையே இந்தியாவின் முதகெலும்பு ஆகும். தமிழகத்தில் ஆட்சி நடத்துவது முதல்வரா? ஆளுநரா?. வரம்புகளை மீறி ஆளுநர் செயல்படுகிறார்.
ஆளுநரின் செயல்பாடுகள் சுயாட்சிக்கும் , ஜனநாயகத்துக்கும் விடப்பட்ட சவால். அதிமுக அரசு கொத்தடிமை கூட்டமாக உள்ளது.
திராவிட கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்ற மதவாத சக்திகளின் எண்ணம் நிறைவேறாது. வாக்குறுதிகளை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது.
சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை முதல்வர்கள் ஏற்ற வேண்டும் என்ற உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. நீட் தேர்வு, ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டம் என அனைத்திலும் பாஜக அரசிடம் சரணாகதி அடைந்து விடுகிறது அதிமுக ஆட்சி.
மதசார்பின்மையை நசுக்க நினைத்தால் தேசிய ஒருமைப்பாடு சிதைந்து விடும். தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிப்பது நிச்சயம், மு.க.ஸ்டாலின் முதல்வராவதும் நிச்சயம் என்றார் வைகோ.