மன உறுதி படைத்த ஜெயலலிதா மீண்டு வருவார் - உருக்கமாக பேசி கண்கலங்கிய வைகோ
அன்பு சகோதரி ஜெயலலிதாவிற்கு கார்டியாக் அரெஸ்ட் என்று கேள்விப்பட்டு மனம் பதை பதைத்தது என்று கண் கலங்கி கூறியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவிற்கு கார்டியாக் அரெஸ்ட் என்று கேள்விப்பட்டு நான் ஒரு நிமிடம் பதறிப் போய்விட்டேன். அவருக்கு வில் பவர் உள்ளது. எம்ஜிஆர் அவர்களுக்கு ஒரு வில் பவர் உள்ளது. அதே வில்பவர்தான் ஜெயலலிதாவிற்கும் உள்ளது. அந்த வில்பவர் ஜெயலலிதாவை மீட்டுக்கொண்டு வரும் என்று வைகோ கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி பேசும் போது கண் கலங்கினார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசி ஜெயலலிதாவின் சாதனைகளை வைகோ நினைவு கூர்ந்தார்.
ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, காவிரி நதிநீர் பிரச்சினை என பல பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொண்டார். சட்டமன்றத்தில் அவரது தைரியமான பேச்சு அனைவரையும் கவரும் என்றும் வைகோ தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைப் பற்றி மருத்துவர்
ரிச்சர்ட் பீலே கூறியது கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். நோய் தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டு வந்தார் முதல்வர் ஜெயலலிதா.
பெரிய கண்டத்தில் இருந்து மீண்ட ஜெயலலிதாவுக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தலின் போது ஜெயலலிதாவின் கையெழுத்தில் கூட தடுமாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் கையெழுத்து பற்றி கூட மனிதாபிமானம் இல்லாமல் அறிக்கை விட்டனர். சகோதரி ஜெயலலிதா உடல்நலக்குறைவு பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஜெயலலிதா மன உறுதி மிக்கவர். எம்.ஜி.ஆரைப் போல அவரும் நோயிலிருந்து மீண்டு வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது. ஜெயலலிதா நீண்ட நாள் வாழ வேண்டும் என்று இயற்கை அன்னையை யாசிக்கிறேன் என்றும் வைகோ உருக்கமாக கூறியுள்ளார்.