விஷ்ணுபிரியா மரணம் கொலையா? தற்கொலையா? முழுமையாக விசாரிக்க வேண்டும் - வைகோ
சென்னை: திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றி அறிய முழுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணி புரிந்து வந்தவர் விஷ்ணுப்பிரியா. தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த விஷ்ணுப்பிரியா, கடந்தவாரம் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விஷ்ணுப்பிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அரசியல் தலைவர்களும், அவரது உறவினர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அது கொலையா? தற்கொலையா? என்பது பற்றி அறிய முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். விஷ்ணுபிரியா மரணம் பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் எந்த உண்மையும் வெளிவராது. சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்' என்றார்.
மேலும், இலங்கையில் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்ற ராஜபக்சேவை இலங்கை அமைச்சர் பாராட்டி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்கிறேன்' என இவ்வாறு வைகோ தெரிவித்தார்.