பிரதமர் மோடியிடம் நதிநீர் இணைப்பு, 20 தமிழர் விவகாரம் இல்லாமல் வைகோ பேசிய இன்னொரு விவகாரம் இது..
ஈரோடு: பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் திடீரென சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலர் நதிநீர் இணைப்பு மற்றும் 20 தமிழர் விவகாரம் குறித்து பேசியதாக டெல்லியில் பேட்டியளித்திருந்தார்.. ஆனால் தற்போது தமது கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பினாங்கு துணை முதல்வர் ராமசாமிக்கு விசா வழங்க வேண்டும் என்பதற்காகவும் பிரதமர் மோடியை சந்தித்தேன் என்று வைகோ தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை கடந்த மாதம் 22-ந் தேதியன்று டெல்லியில் வைகோ சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 14 மாதங்களுக்குப் பின்னர் பிரதமர் மோடியை சந்திக்கிறேன். அவரிடம் நான் பல கோரிக்கைகளை வலியுறுத்தினேன். முக்கியமாக தென்னக நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் மசோதா அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் அழிந்து விடுவார்கள். ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். தனது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமான அமைந்தது என்று வைகோ கூறியிருந்தார்.
அத்துடன் பிரதமர் மோடியிடம் வைகோ அளித்த கோரிக்கை மனு என்று கூறப்பட்ட அறிக்கையில் பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் ஈரோட்டில் நேற்று நடைபெற்ற "திராவிட இயக்க கருத்துப் பட்டறை" நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:
மலேசிய நாட்டில் உள்ள பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி, திருப்பூர் ம.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்கிறார். அவருக்கு விசா வழங்க கோரியே பிரதமர் மோடியை சந்தித்தேன்.
செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நானும், பினாங்கு துணை முதல்வரும் சந்திக்க பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டுள்ளோம். விசா அனுமதி கோரி 18 நாட்கள் ஆகின்றன. இதுவரை பதில் வரவில்லை.
இதுகுறித்து பிரதமரிடம் 2 நாட்களில் பேசுவேன். விசா கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகஸ்ட் 31-ந் தேதி வரை விசாவுக்காக காத்திருப்பேன். விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என துணை முதல்வர் ராமசாமிக்கு விசா வழங்க மறுத்தால் 10 ஆயிரம் போஸ்டர் அடித்து மக்கள் மன்றத்திலே இதைநான் தெரிவிப்பேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.
இதுதான் ஹிட்டன் அஜெண்டாவோ?