பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வைகோ, வேல்முருகன், வாசன் வலியுறுத்தல்!
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமாகா தலைவர் வாசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை : பெட்ரோல், டீசல் தமிழக அரசின் வாட் வரி உயர்வால் திடீரென பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆகையால் தமிழக அரசு வாட் வரி உயர்வை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ, வாசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நேற்று நள்ளிரவு முதல் மிக கடுமையாக உயர்ந்தது. தமிழக அரசு சந்தடிசாக்கில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியதே இதற்கு காரணம்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது எனில் தமிழக அரசும் உயர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாபஸ் பெற வேண்டும்
தமிழக அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை பெட்ரோல்-டீசல் விலைகளை உயர்த்தி வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு அரசும் தன் பங்குக்கு வாட் வரியின் மூலம் விலையை உயர்த்தியுள்ளது. இவ்விலை உயர்வின் காரணமாக விலைவாசி மேலும் மிகக் கடுமையாக உயரும். விலைவாசி உயர்வால் துன்பட்டு வரும் மக்களுக்கு மேலும் துன்பத்தை கொடுத்திடும் வகையில் அரசின் அறிவிப்பு உள்ளது. விலை உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஜி. ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்புகள் எல்லாப் பொருட்களின் விலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். சதவிகித அளவில் செய்யப்பட்டுள்ள உயர்வானது இனி வரும் காலங்களில் செய்யப்படும் ஒவ்வொரு உயர்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். நூறாண்டு காணாத வறட்சியில் மாநில மக்கள் தவிக்கின்றனர். ரேசன் முறையில் மக்களுக்கு கிடைத்து வந்த சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை நிறுத்தப்பட்டு விட்டது. கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்பின்னணியில் வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி உள்ளது என சாடியுள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச்செயலர் தம்முடைய அறிக்கையில், இவ்விலை உயர்வின் காரணமாக விலைவாசி மேலும் மிகக் கடுமையாக உயரும். விலைவாசி உயர்வால் துன்பட்டு வரும் மக்களுக்கு மேலும் துன்பத்தை கொடுத்திடும் வகையில் அரசின் அறிவிப்பு உள்ளது. விலை உயர்வை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
வேல்முருகன், ஜி.கே. வாசன்
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். மத்திய , மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தமது அறிக்கையில், இந்த பெட்ரோல்-டீசல் விலை உயர்வை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இந்த விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.