மனம் குழம்பிப்போயுள்ளார் வைகோ... டிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையான மனக்குழப்பத்தில் இருக்கிறார் அதனால் அவர் திமுக மீது பழிபோட்டுப் பேசுகிறார் என்று திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக மீது பழிபோடும் வைகோ, மனக் குழப்பத்தில் இருக்கிறார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் இளங்கோவன். அப்போது அவர், ''திமுக போட்ட பொய் வழக்கின் காரணமாக நான் சிறையில் இருக்கிறேன் என்கிறார் வைகோ. திமுகவின் வழக்கால்தான் தான் சிறையில் இருப்பதாக காட்டிக்கொள்ள வைகோ முயற்சிக்கிறார். வைகோ மனக் குழப்பத்தில் இருப்பதற்கான எடுத்துக்காட்டு இது'' என்று தெரிவித்தார்.
சென்ற 2009ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதில் மூன்றாவது முறையாக வைகோவின் காவல் நீட்டிக்கப்பட்டு, வரும் ஜூன் 2-ம் தேதிவரை வைகோவை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில்,திமுக மீது பழிபோடும் வைகோ மனக் குழப்பத்தில் இருக்கிறார் என்று டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளது மதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.