கருணாநிதியின் புன்னகையிலும் கண்ணீரிலும் இருக்கும் ஆயிரம் செய்திகளை இன்று வெளிப்படுத்துவார் வைகோ?
திமுகவின் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ பங்கேற்கிறார்.
சென்னை: திமுகவின் மேடையில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் வைகோ பேச இருப்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தல்களில் திமுகவை வீழ்த்துவதில் கங்கணம் கட்டிக் கொண்டு கூட்டணிகள் அமைப்பதில் வைகோ படுதீவிரமாக இருந்தார். இதனால் திமுகவினரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார் வைகோ.
இதன் உச்சகட்டமாக வைகோ தெரிவித்த சில கருத்துகளை திமுகவினர் கொந்தளிக்க வைத்தது. இதனால் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டபோது அவரை பார்க்க வந்த வைகோவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் திமுக தொண்டர்கள்.
வைகோவை வரவேற்ற ஸ்டாலின்
அப்போதும்கூட ஸ்டாலின் மீது வைகோ குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் காலச்சக்கரம் இப்போது சுழன்றோடிவிட்டது. அண்மையில் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த வைகோவை வாசலில் நின்று வரவேற்றார் மு.க.ஸ்டாலின்.
நெகிழ்ச்சியான வைகோவின் பேட்டி
பின்னர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் வைகோ. இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, என்னைப் பார்த்து கருணாநிதி புன்னகைத்தார். என் கைகளை இறுகக் கைப்பற்றிக் கொண்டார் கருணாநிதி. அப்போது அவரது கண்களில் கண்ணீர் கசிந்தது. என்னாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. கருணாநிதியின் புன்னகையிலும் கண்ணீரிலும் ஆயிரமாயிரம் செய்திகள் உண்டு என்றார் வைகோ.
முரசொலி விழாவில் வைகோ
வைகோவின் இந்த பேச்சில் உள் அரசியல் இருப்பதாகவே பார்க்கப்பட்டது. அதுவும் தமிழகத்தில் அதிமுகவை கைப்பற்றி பாஜக காலூன்ற போராடும் நிலையில் வைகோவின் சந்திப்பும் பேச்சும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் வைகோவும் பங்கேற்று பேசுகிறார்.
பெரும் எதிர்பார்ப்பு
சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக மேடையில் வைகோ பேச இருக்கிறார். அரியலூர் அனிதாவின் மரணத்தால் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிற நிலையில் வைகோ உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று திரண்டு முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அத்துடன் வைகோ கூறியது போல, கருணாநிதியின் புனகையிலும் கண்ணீரிலும் இருக்கும் ஆயிரமாயிரம் செய்திகளை இன்றைய கூட்டத்தில் அவர் வெளிப்படுத்துவாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.