புகைப்பிடிப்பவன் பெண்கள் கையைப் பிடித்து இழுப்பதில்லை.. மகனுக்கு ஆதரவாக பேசும் வைகோ
சென்னை: புகைப்பிடிப்பவன் பெண்கள் கையைப் பிடித்து இழுப்பதில்லை என்றும், புகை பிடிப்பதால் சமுதாயம் அடியோடு நாசமாவதில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், காந்தியவாதி சசிபெருமாள் மதுவுக்கு எதிராக போராடும் போது மரணம் அடைந்ததையடுத்து, மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி உள்ளன.
இந்நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தனது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார். மேலும், பெண்களையும், மாணவர்களையும் வீதிக்கு வந்து மதுவிலக்குக்காக போராட அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்நிலையில், வைகோவின் மகன் துரை வையாபுரி, சிகரெட் விநியோகஸ்தராக இருப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் கடந்த 2 தினங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் இன்று (5ஆம் தேதி) சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது ஒரு செய்தியாளர், 'உங்கள் மகன் புகையிலைக்கு டிஸ்ட்ரிபியூட்டராக இருப்பதாக செய்தி வந்துள்ளதே?' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு வைகோ பதிலளிக்கையில், ''எனது மகன் துரை வையாபுரி பினாமியில் வாங்கவில்லை. அவன் எம்.ஏ. படித்திருக்கிறான். இன்டர்வியூவுக்கு போனான். ஐ.டி.சி.யில் அவனுக்கு தென்காசி டவுனுக்கு ஏஜென்சி கிடைத்தது. கோதுமை மாவு, கடலை மாவு, பருப்பு, ஆட்டா மாவு, சிகரெட் இவற்றுக்கு சேர்த்து அவன் டிஸ்ட்ரிபியூட்டர் வாங்கினான்.
தமிழ்நாட்டில் 200 டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இருக்காங்க. இவனுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் இல்லன்னா இன்னொருவனுக்கு கொடுக்க போறாங்க. அரசியல்வாதிகள் பினாமியில சொத்து சேர்த்து, பினாமியில தொழில் நடத்துறாங்க. காலேஜ், சாராய தொழிற்சாலை என்று.
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு. ஆனா, புகை பிடிச்சவன் பலாத்காரம் செய்கிறதில்லை. புகை பிடிச்சதுனால போய் பெண்கள் கையை பிடித்து இழுக்கிறதில்லை. புகை பிடிச்சதுனால ஒருவனைப் போய் கை, காலை வெட்டுறதில்லை. புகை பிடிச்சதுனால பெத்த தாயை பலாத்காரம் செய்யப்போவதில்லை. புகை பிடிக்கிறதால சமுதாயம் அடியோடு நாசமாக்குறதில்லை. இதுதான் உண்மை நிலைமை.
ஆனால், இதுல எந்த ஒளிவுமறைவும் கிடையாது. ஜெயலலிதா அரசு தமிழ்நாட்டில் சிகரெட், புகை எதுவும் விற்கக்கூடாது என்று சொல்லவேண்டும் என்று நான் வேண்டுகிறேன். முதல் ஆளா வரவேற்கத் தயாராக இருக்கிறேன். நான் அவனுக்கு எந்த சொத்தும் ஏற்படுத்திக் கொடுக்கல. அவன் முயற்சியில அவன் தொழில் பண்றான். நான் நியாயப்படுத்தறேன்'' என்றார்.
'புகை பிடிப்பதால் ரத்த புற்று நோய் வரும்', 'புகைப்பது நீங்கள், புகைவது நாங்களா?', 'புகைப்பவர்களைவிட, அருகில் இருப்பவர்களுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது' போன்ற பல்வேறு விப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வரும் இந்த நேரத்தில், வைகோ இதுபோன்று பேசி இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.