சோடா பாட்டில், கற்கள் வீசத்தெரிந்தால் ஜீயராகிவிடலாம் - கனிமொழி 'அட்டாக்'
ஜீயர் ஆவதற்கு ஜாதி முக்கியம் என நினைத்திருந்தேன், ஆனால் சோடா பாட்டில் வீசத்தெரிந்தால் போதும் போலிருக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்
சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி. கனிமொழி, ஜீயர் ஆவதற்கு ஜாதி முக்கியம் என நினைத்திருந்தேன், ஆனால் சோடா பாட்டில் வீசத்தெரிந்தால் போதும் போலிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஸ்டாலின், வைகோ, முத்தரசன், கனிமொழி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
ஏழை எளியவர்கள், மாணவர்கள் மற்றும் நடுத்தர மக்களை பஸ் கட்டண உயர்வு பெருமளவு பாதித்துள்ளதாக கூறி திமுக சார்பாக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. வெகுமக்களின் உணர்வுகளை மதித்து, பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒரே மேடையில் கலந்துக்கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் பஸ் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்பபெறவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து பேசிய கனிமொழி பேருந்து கட்டணத்தை உடனடியாக தமிழக அரசு திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பேசிய அவர், ஜீயர்கள் ஆவதற்கு ஜாதி தான் அடிப்படை என்று நினைத்துக்கொண்டிருந்தோம். அந்த எண்ணம் தவறு, சோடா பாட்டிலும், கற்களும் வீசத்தெரிந்தாலே ஜீயர் ஆகிவிடலாம் என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பஸ் கட்டண உயர்வு மக்களை வாட்டி வதைப்பதாகவும் இதனை உடனடியாக அரசு திரும்பபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பேசிய அவர், ஜீயர்கள் சோடா பாட்டில்களை வீசினால் நாங்கள் அண்ணா வழியை கையாள்வோம் என்றார். திராவிட இயக்கத்தினர் மதயானையை அடக்கியவர்கள், எங்களுக்கு சோடா பாட்டில், கற்களை சந்திப்பது எப்படி என்று தெரியும்.
திமுக சார்பாக சென்னையில் 5 இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.