சிறுதாவூர் பங்களா விவகாரம்- நாளை மாமல்லபுரம் வரும் வைகோவை கைது செய்யத் திட்டமா?!
சென்னை: மாமல்லபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, சிறுதாவூர் பங்களா விவகாரம் தொடர்பாக போலீஸார் கைது செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுதாவூர் பங்களாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கியுள்ளதாக கூறி அவதுாறு பரப்பியதாகக் கூறி வைகோ மீது அ.தி.மு.க மாவட்ட செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையை துவக்கியுள்ளனர்.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் வைகோ தலைமையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் மற்றும் ஐந்து ரதங்களை அருகே சென்று சுற்றி பார்க்க இந்தியர்களுக்கு 10 ரூபாய், வெளி நாட்டவர் களுக்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் இந்தியர்களுக்கு 30 ரூபாய், வெளி நாட்டவர்களுக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து போர்டுகள் வைத்துள்ளனர்.
தொல்லியல் துறையினரின் இந்த திடீர் கட்டண உயர்வை கண்டித்து மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமை அமைப்பினர் சார்பில் மாமல்லபுரத்தில் நாளை (ஏப்ரல் 6) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. இதில் வைகோ பங்கேற்கிறார். மாமல்லபுரம் போலீஸ் அதிகாரியின் கட்டுப்பாட்டில்தான் திருப்போரூர் போலீஸ் நிலையம் வருகிறது.
இந்த போலீஸ் நிலையத்தில்தான் சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கப்படுவதாக வைகோ கூறிய கருத்துக்கு எதிராக சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.
அப்புகார் தொடர்பாக விசாரணை நடந்துவரும் வேளையில் நாளை மாமல்லபுரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் வைகோவை கைது செய்து சிறையில் அடைக்க உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக ம.தி.மு.க நிர்வாகிகளிடம் தகவல் பரவியது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கட்சியினர் வைகோவிடம் வைத்த வேண்டுகோளை அவர் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
அவர் கைதாகலாம் என்று கூறப்பட்டாலும் தேர்தல் நேரத்தில் அவருக்கு அனாவசியமாக முதல்வர் ஜெயலலிதா விளம்பரம் தேடித் தர மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.