அடுத்தடுத்த பரபரப்புகள் நடுவே, தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த்-வைகோ திடீர் சந்திப்பு!
சென்னை: தேமுதிகவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சி தலைவர் விஜயகாந்த்தை, மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ இன்று திடீரென சந்தித்து பேசினார்.
தேமுதிகவில் சந்திரகுமார் உள்ளிட்ட, 3 எம்.எல்.ஏக்களும், சில மாவட்ட செயலாளர்களும், தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து, அவர்கள் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
தேமுதிகவை உடைப்பதில் திமுகவின் பங்கு உள்ளது என்று குற்றம்சாட்டிய மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மன்னிப்பு
வைகோவின் பேச்சுக்கு ம.ந.கூவிலுள்ள தலைவர்களே கண்டனம் தெரிவித்த நிலையில், திமுகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து வைகோ அவசரமாக, கருணாநிதியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
வைகோ மட்டும்
இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே இன்று காலை 11 மணியளவில் தேமுதிக அலுவலகம் சென்ற வைகோ, அங்கு விஜயகாந்த்தை சந்தித்து பேசினார். அப்போது மக்கள் நல கூட்டணியின் வேறு தலைவர்கள் உடன் செல்லவில்லை.
அனுமதியில்லை
இந்த சந்திப்பை புகைப்படம் மற்றும் வீடியோ படமாக எடுக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சந்திப்பு குறித்த புகைப்படத்தை மதிமுக கட்சி வெளியிட்டது.
மாநாடு, தொகுதி பங்கீடு
சமீபகாலமாக மக்கள் நல கூட்டணியை உடைக்க எடுக்கப்படும் முயற்சிகள், தேமுதிகவிலுள்ள குழப்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். வரும் 10ம் தேதி நடைபெற உள்ள மக்கள் நல கூட்டணி மாநாடு, கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.