எத்தனை போராட்டங்கள்.. தேர்தலில் மட்டும் மக்கள் மனசாட்சியை மறந்துவிடுகிறார்களே.... வைகோ ஆதங்கம்
மதுரை: தமிழக நலனுக்கான எத்தனையோ போராட்டம் நடத்தினாலும் தேர்தலின் போது மக்கள் மனசாட்சியை மறந்துவிடுகிறார்கள் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
மதிமுக எத்தனையோ சோதனைகளை கடந்து வந்துள்ளது. உங்களை வைத்துதான் நான், இரவு பகலாக 23 ஆண்டுகள் ஊர்ஊராக சென்று 5 மாவட்டமும் பாலைவனமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக முல்லை பெரியாறு அணை பிரச்சினை, அணு உலை பிரச்சினை, ஈழத் தமிழர் படுகொலை, அமராவதி அணை, காவிரி பிரச்சினை என்று பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து போராடி வருகிறேன்.
மனசாட்சியை மறந்த மக்கள்
ஆனால் நாம் தேர்தலை சந்திக்கும்போது மக்கள் மனசாட்சி மறந்து விட்டு செயலாற்றுகிறார்கள். தமிழகமும் தமிழினமும் தாக்கப்படுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் 3 மாநிலங்களும் நம் உரிமையை பறிக்க வஞ்சகம் செய்கிறது.
தலைதூக்கும் பணநாயகம்
மக்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு தோற்று போகிறார்கள். ஜனநாயகம் தூக்கி வீசப்பட்டது. பணநாயகம் தலை தூக்கியது.
நேர்மை, நாணயம்
புகழுக்காக உயிரைகொடுக்கலாம், பழி என்று போட்டால் ஏற்று கொள்ளக்கூடாது. அப்படிபட்ட ஈனவாழ்வை வாழ்வதை விட மடிவதுதான் மேல். நேர்மையும் நாணயமும் என் கவசம்....என்சொத்து.
முயற்சி செய்வோம்...
இந்த கட்சியின் உயிர்நாடி நீங்கள் தான். குடும்பங்கள் நேசிக்கும் கட்சி ம.தி.மு.க. முயற்சி உடையான் இகழ்ச்சி அடையான்....முயற்சி திருவினையாக்கும். நம்மிடையே தவறுகள் இருப்பின் அதை சரி செய்து கொள்ள வேண்டும்.
யாராலும் அசைக்க முடியாது
உள்ளாட்சி தேர்தலில் நல்ல பெயர் வாங்கியுள்ள இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். வதந்திகளுக்கு காது கொடுக்காதீர்கள். நெருப்பை கரையான் அரிக்காது. லட்சிய நெருப்பாக நீங்கள் இருக்க வேண்டும். யார் மீதும் கோபமோ வருத்தமோ கிடையாது. இந்த இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது.
இவ்வாறு வைகோ பேசினார்.