கூடவே வந்த கட்சிக்காரர்களின் வாகனங்களை திருப்பி அனுப்பிய வைகோ...
மதுரை: மதுரையில் இருந்து பசும்பொன் சென்றபோது, தனது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த கட்சி நிர்வாகிகளின் 12 வாகனங்களை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று தனது வாகனத்தில் புறப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நுழைவாயில் வேலம்மாள் பள்ளி அருகே சென்றபோது, வைகோ தனது வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கினார். தனது வாகனத்திற்குப் பின்னால் வந்த கட்சி நிர்வாகிகள் வாகனங்களை எண்ணிப் பார்த்த வைகோ, அனைவரையும் அழைத்தார். சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு உள்ளது. குருபூஜைக்கு செல்வோர் மூன்று வாகனத்திற்கு மேல் செல்லக்கூடாது என காவல்துறை தடை உத்தரவு உள்ளது. சட்டம் ஒழுங்குக்கு நாமே காரணமாக இருந்துவிடக்கூடாது எனக்கூறிய வைகோ, மற்ற நிர்வாகிகள் எனது வாகனத்தை பின்தொடர்ந்து வேண்டாம் என திருப்பி அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தங்களது வாகனங்களில் மதுரைக்கு திரும்பி வந்தனர்.
அதன்பின்னரே வைகோ பசும்பொன்னுக்குப் புறப்பட்டார். வைகோவுடன் இரண்டு வாகனங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்றனர். நடுரோட்டில் நின்றுகொண்டு வைகோ தனது கட்சி நிர்வாகிகளை திருப்பி அனுப்பிய சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.