காவிரிக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் உடல் தகனம் : சீமான், வைகோ பங்கேற்பு
சென்னை: தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷின் இறுதி ஊர்வலம் மன்னார்குடியில் காந்தி நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் வைகோ, சீமான், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
காவிரி பிரச்சனைக்காக தீக்குளித்து உயிரிழந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷின் உடல் மன்னார்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சொந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ள பிரேதத்துக்கு நாம் தமிழர் கட்சியின் கொடியை போர்த்துவதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளித்த விக்னேஷ்
காவிரி பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழர் உரிமை மீட்புப் பேரணியில் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் தீக்குளித்தார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தா அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபலங்கள் அஞ்சலி
இதையடுத்து விக்னேஷின் உடலுக்கு சீமான், வெள்ளையன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் விக்னேஷின் உடல், நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான வளசரவாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு விக்னேஷின் உடலுக்கு, இயக்குநர்கள் விக்ரமன், வி. சேகர், களஞ்சியம், வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுதது அவரது உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சொந்த ஊரில் மரியாதை
மன்னார்குடியில் சொந்த வீட்டில் வைக்கப்பட்ட பிரேதத்துக்கு கட்சியின் கொடி போர்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியினர் சிலர் முற்பட்டனர். அதற்கு உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்னேஷின் தாயாரும் கொடியை போர்த்த மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகோ அஞ்சலி
இந்நிலையில் மன்னார்குடியில் இன்று காலை 10 மணி வரை விக்னேஷின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மன்னார்குடியில் அஞ்சலி செலுத்தினார். மேலும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிபிஐ மகேந்திரன், பாஜக கருப்பு முருகானந்தமும் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
விக்னேஷ் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியிலும் வைகோ, சீமான், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்ட எஸ்பி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் உடல் மன்னார்குடியில் உள்ள காந்திநகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.