கூட்டணிக்கு ஒத்திகை...?: ஒரே மேடையில் வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னையில் அண்மையில் ம.பொ.சிவஞானத்தின் 18வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டார்.
அவருடன் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலர் வைகோவும் கலந்து கொண்டார். ஏற்கெனவே வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில்தான் ஈழத் தமிழருக்கு ஆயுதம் கொடுக்கப்படவில்லை என்று வைகோ பேசி வருகிறார்.
அப்படி பாஜக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் கூட குஜ்ரால் காலத்து ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் என்று நெடுமாறனும் ஆதரித்துப் பேசி வருகிறார்.
அண்மைக்காலமாக தமிழருவி மணியனோ, பாஜக அணியில் வைகோ, தேமுதிகவை சேர்க்காமல் ஓயப்போவதில்லை என்று சபதம் போட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுடன் வைகோ ஒரே மேடையில் ஏறி இருப்பது மதிமுக, பாஜக கூட்டணியில்தான் இடம்பெறும் என்பதை மறைமுகமாக உறுதி செய்திருக்கிறது என்றே கூறப்படுகிறது.
இக் கூட்டத்தில் பேசிய பொன் ராதாகிருஷ்ணன் வைகோவை வானலாவப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.