மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல 8 வழிச்சாலையை செயல்படுத்துவதா? வைகோ
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் யாருக்கானது என்பதே எங்கள் கேள்வி என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டம் யாருக்கானது என்பதே எங்களின் கேள்வி ? அதனால், நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திடத் தமிழக அரசு முனைந்துள்ளது.
இதனால் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகள், விளை நிலங்கள், கஞ்ச மலை, ஜருகு மலை, கல்ராயன் மலை, தீர்த்த மலை, கவுதி மலை, வேடியப்பன் மலை ஆகிய மலைகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஏரிகளும், லட்சக்கணக்கான மரங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
ம.தி.மு.க. எந்த வளர்ச்சித்திட்டங்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் வளர்ச்சி யாருக்கு? என்பதுதான் எங்கள் கேள்வி. பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல பசுமைச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று எடப்பாடி பழனிசாமி மார்தட்டுவது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.
எனவே பசுமையை அழிக்கும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இயற்கையை காக்கக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், சேலம் பியூஸ் மனுஷ், மாணவி வளர்மதி போன்றவர்களை, சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.