மநகூ ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிப்பா? மதிமுக திட்டவட்ட மறுப்பு!
மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் மதிமுக இதை திட்டவட்டமாக மறுத்தது.
சென்னை: மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து மதிமுக பொதுச்செயலர் வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் மதிமுக இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின. இதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்து வருகிறார்.
சிபிஎம் முடிவு
3 தொகுதி தேர்தல் தொடர்பான ஆலோசனையின் போது போட்டியிட சிபிஎம் விரும்பியது. தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என சிபிஎம் கூறியிருந்தது. ஆனால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வைகோ, 3 தொகுதி தேர்தலை மநகூ புறக்கணிப்பதாக அறிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள்
இதேபோல் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்த ஆலோசனையில் கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறோம் என்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கூறியிருந்தது. ஆனாலும் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தை மநகூ புறக்கணிக்கிறது என வைகோ அறிவித்தார்.
ஸ்டாலினுக்கு கடிதம்?
இந்த விவரங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே வெளிப்படுத்தின. திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மீண்டும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் அக்கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை இருப்பதாக திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் அனுப்பினார்.
வைகோ விடுவிப்பு?
இதனிடையே மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர் தேவை இல்லை என இடதுசாரிகள் முன்வைத்த கருத்தை மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் ஏற்றுக் கொண்டதாக அச்செய்திகள் தெரிவித்தன.
மதிமுக திட்டவட்ட மறுப்பு
ஆனால் மதிமுக இச்செய்தியை திட்டவட்டமாக தெரிவித்தது. நமது ஒன் இந்தியா தள நிருபருடன் பேசிய மதிமுகவின் இணையதள செய்தித் தொடர்பாளர் மின்னல், இச்செய்தி உண்மையானது அல்ல என்றார்.