வெல்லும் சொல், என் அண்ணா, புரட்சிக் கதிர்கள்.. வைகோவின் 3 நூல்கள் வெளியீடு
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
விகடன் பிரசுரம் வழங்கிய வைகோவின் மூன்று இலக்கியப் படைப்புகளான வெல்லும் சொல், என் அண்ணா, புரட்சிக் கதிர்கள் ஆகிய நூல்களின் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி 11.01.2014 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தமிழருவி மணியன் தலைமை தாங்கினார். க.அழகுசுந்தரம் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை மு.செந்திலதிபன் தொகுத்தளித்தார். பழ.அருணகிரிநாதன் நன்றி கூறினார்.
'வெல்லும் சொல்' நூலை முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட எழுத்தாளர் மதுரா பெற்றுக் கொண்டார்.
'என் அண்ணா' நூலை வேலூர் ஜி.விசுவநாதன் வெளியிட, முனைவர் பத்மலட்சுமி பெற்றுக்கொண்டார்.
'புரட்சிக் கதிர்கள்' நூலை புகழேந்தி தங்கராஜ் வெளியிட, திருமுருகன் காந்தி பெற்றுக்கொண்டார்.
நூல் ஆசிரியர் வைகோ ஏற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய செயலாளர் இல கணேசன் மற்றும் மோகன்ராஜுலு மற்றும் ஏராளமான மருத்துவர்கள், தொழிலதிபர், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
விழா மாலை 5.30 மணிக்குத் தொடங்கியது 11.30 மணிவரை நடைபெற்றது. மதிமுகவினர் மட்டுமல்லாது, முக்கிய அரசியல் கட்சியினரும், தொழிலதிபர்களும், கிட்டத்தட்ட6 மணிநேரத்திற்கும் மேல் வரை காத்திருந்து வைகோ வின் ஏற்புரையை கேட்டனர்.
குறிப்பாக அரசியல்கட்சியினர் விழா என்றாலே குடும்பத்தினருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்குவதுண்டு. ஆனால் வைகோ நூல் வெளியீட்டு விழாவில் அவரது மனைவி, மகன், சகோதரர், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் 10வது வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.