நாங்களும் சொல்வோம்ல... வைகோ சொன்ன பாம்பு - தவளை; தவிக்கும் மான்கள் கதை
சென்னை: சட்டசபை தேர்தல் களத்தில் சுவராசியங்களுக்கு பஞ்சம் இருக்காது.... அண்மையில் முதல்வர் ஜெயலலிதா "அப்பா- மகன்" கதை சொல்லப் போய் திமுக தலைவர் கருணாநிதியோ "எதிர்வீட்டு சீமாட்டி" கதையை தந்தார்... தொடர்ந்தும் ஜெயலலிதா பேசும் இடம்லெல்லாம் குட்டிக் கதைகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார்....
அதிமுக, திமுக தலைவர்கள் மட்டும்தான் கதை சொல்லி சுவராசியப்படுத்துவார்களா? நாங்கள் எல்லாம் சொல்லமாட்டாமா? என்கிற ரேஞ்ச்சில் மதிமுக பொதுச்செயலர் வைகோ சென்னை ஆவடியில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் சொன்ன கதை இது:
இங்கே அற்புதமான... அபூர்வமான காட்சி நடக்கிறது
கொளுத்தும் வெயில்.. சுட்டெரிக்கும் வெயில்.. எங்காவது தன்னுடைய மேனியை கருகவிடாமல் காப்பாற்றிக் கொள்ளலாமா என்று அந்த நாகபாம்பு அந்த பாதையிலே வருகிறது...
எங்கும் நிழல் இல்லை...எங்கும் விருட்சங்களின் நிழல் இல்லை..எங்கும் மர நிழல் இல்லை... உடம்புபூராவும் கருகிவிடுமே என்ற பயத்தில் நாகபாம்பு படமெடுத்து நிற்கிறது.
பாம்பின் வாலின் நுனி மட்டும் தரையில் தொட்டு கருகிக் கொண்டிருக்கிறது. ஆனால் உடம்புபூராவையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக படமெடுத்து அது ஆடுகிறது.,..
இப்போது ஒரு தவளை- தேரை வருகிறது....எங்காவது நிழல் கிடைக்குமா? இந்த நெருப்பில் இருந்து உருகி செத்து போய்விடுவோமே.. எங்கேயாவது நிழல் கிடைக்குமா என வரும்போது ஒரு நிழல் கிடைத்தது...
ஆஹா... ஒரு நிழல் இருக்கிறது.. அந்த நிழலில் போய் இருந்து கொள்வோம் என அதில் இருந்து கொள்கிறது... பாம்புக்கு தெரியாது தன் நிழலில் இருப்பதே தன் பசியை போக்குகிற கண்டமாத்திரத்திலே தான் கொத்தி விழுங்குகிற தவளைதான் என்று...
அது வெயிலுக்காக அப்படியே நட்டமாக நிற்கிறது..
தவளைக்கும் தெரியாது... தாம் நாக பாம்புவின் படத்துக்கு கீழே இருக்கிறோம் என்று...
இது சாகுந்தலம் தீட்டிய காளிதாஸ் காட்டுகின்ற காட்சி.
இங்கே வாருங்கள்... காவிரி கரைக்கு.... தமிழர் பூமிக்கு வாருங்கள்... வெயிலின் கொடுமையை சித்தரிக்கிறார் சங்க இலக்கியத்திலே தமிழ்ப் புலவன்..
இரண்டு மான்கள் வருகின்றன... தாகத்தால் தவிக்கின்றன... மராட்டிய எழுத்தாளர் காண்டேகர் சொல்வாரே.... நீர் தேடி தேடி வயிறு வீங்கி வெடித்து சாகின்றன காதல் மான்கள் என... அதைப் போல இந்த மான்கள் நீர் தேடி செல்கின்றன... எங்கும் தண்ணீர் இல்லை.
கடைசியாக நாவறண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என வருகிற நேரத்தில் ஒரு சிறிய குட்டையில் கலங்கிய நிலையில் சிறிய அளவு தண்ணீர் உள்ளது. இருக்கிற தண்ணீர் ஒரு மான் பருகுவதற்கே போதாது..
ஆகவே இரண்டு மான்களும் அங்கே வருகின்றன... இரண்டு மான்களும் தண்ணீரை உறிஞ்ச நெருங்கி செல்கின்றன...
தண்ணீர் அப்படியே இருக்கிறது... தான் குடித்தால் அடுத்த மானுக்கு தண்ணீர் கிடைக்காது;
நாம் செத்து போனாலும் பரவாயில்லை அந்த மான் உயிரோடு இருக்கட்டும்; அந்த மான் தாகம் தீரட்டும் என்று தண்ணீரை பருகவில்லை
அடுத்த மானும் அதேபோல் இருக்கிறது; இரண்டு மான்களும் தண்ணீர் பருகவில்லை... ஒன்றின்மீது ஒன்று வைத்திருக்கும் பற்று காரணமாக என்று வெயிலின் கொடுமையை தமிழன் சித்தரித்துள்ளான்...
பாம்பும் தவளையும்தான் காங்கிரஸும் திமுகவும். இங்கே ஜி.ஆர். கேட்கிறார் எது பாம்பு? எது தவளை என....
தமிழ்நாட்டில் திமுக பாம்பு ... காங்கிரஸ் தவளை
அகில இந்தியா அளவில் காங்கிரஸ் பாம்பு- திமுக தவளை
அந்த மான்கள்- நாங்கள்தான்.. இந்த 4 கட்சி மக்கள் நலக் கூட்டணிதான்
இவ்வாறு வைகோ கூறினார்.