மநகூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியது பெரிய விஷயமல்ல என்கிறார் சீமான்
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியது பெரிய விஷயமல்ல என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக்கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் தோழமையும், நட்பும் என்றும் தொடரும். அதற்கு ஒரு அடையாளமாகத்தான் வருகிற 30ஆம்தேதி நல்லக்கண்ணு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறேன் என்று கூறினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிவிப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியது பெரிய விசயமல்ல என்று கூறினார். தொடர்ந்து பேசிய சீமான், தலைமை செயலகம் ராம மோகன் ராவ் வீடு உள்ளிட்ட இடங்களில் துணை ராணுவத்தை வைத்து சோதனை நடத்தியது தமிழக அரசை மிரட்டி பணியவைக்கும் முயற்சி என்றார்.
ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கமளிக்க வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார்.