மக்களின் எதிர்ப்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி இருக்கிறது பட்ஜெட் - வைகோ
நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் பட்ஜெட் அறிவிப்புகள் தவிடுபொடியாக்கி விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் பட்ஜெட் அறிவிப்புகள் தவிடுபொடியாக்கி விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க. அரசு முதல் மூன்று ஆண்டுகளில் 7.4 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது என்றும், 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என ஜேட்லி கூறியுள்ள நிலையில், பொருளாதார நிபுணர்கள் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளதை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறை பண வீக்கம் 3.3 விழுக்காடு அளவுக்குக் குறைந்திருந்தாலும், பொருட்களின் விலையோ சேவைத் துறைகளின் விலையோ குறையவில்லை என்பதுதான் யதார்த்த நிலை ஆகும். மேலும் பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளால் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களும், பன்னாட்டுப் பெரு நிறுவனங்களும்தான் பெரிதும் பயன் பெற்றுள்ளதாகவும் சாமானியனுக்கு இதனால் எந்த பலனும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மேக் இன் இந்தியா', 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டங்கள் கடந்த கால நிதிநிலை அறிக்கைகளில் பெரிதாகச் சொல்லப்பட்டவை. ஆனால், நடைமுறைக்கு வந்ததா இல்லையா என தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள வைகோ, பிரதமர் பொறுப்பை ஏற்றபோது ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மோடி அளித்த வாக்குறுதியும் நிறைவேறியதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு ஆக்கப்படும் என்று மோடி அரசு கூறுவது ஒருபோதும் நடக்காது என்றும், வேளான்மையை பொறுத்தவரை அனைத்தும் பாதியில் நிற்பது தான் வரலாறு என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கை மூன்றரை ஆண்டுகால தோல்வியை எதிரொலிக்கிறதேயொழிய அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் இல்லை என்று வைகோ தெரிவித்தார்.
எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே வரவேற்கத் தக்கது என்று தெரிவித்த வைகோ, அனைத்துத் துறைகளிலும் மிக வேகமாக இந்தியைத் திணித்து வருகிற மத்திய அரசினுடைய இந்தி வெறி பட்டவர்த்தனமாக பட்ஜெட் இந்தியில் படித்ததிலிருந்து புலப்படுவதாக தெரிவித்துள்ளார்.