விஜயகாந்தும், வாசனும் எங்கள் கூட்டணியில் கைகோர்ப்பார்கள் - வைகோ நம்பிக்கை
சென்னை: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் தமாகா தலைவர் வாசன் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மழை வெள்ளத்தால் சிறு, குறு தொழில் செய்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் தொழில் தொடங்கவும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் வாசன் ஆகியோர் மக்கள் நலக் கூட்டியக்கத்தில் கைகோர்க்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். அந்த வேண்டுகோளுக்கு அவர்கள் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் நலக் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி என்று விஜயகாந்த் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் எங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.